சண்டிகர்: அமெரிக்காவில் சீக்கிய குடும்பம் கடத்தி கொல்லப்பட்டதற்கு பஞ்சாப் முதல்வர் மான், எஸ்ஏடி தலைவர் பாதல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 சீக்கிய குடும்பத்தினர், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் எட்டு மாத பெண் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கௌர் (27), ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமன்தீப் சிங் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீக்கிய குடும்பம் பஞ்சாபில் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள தாண்டா பிளாக்கில் உள்ள ஹர்சி பிண்டில் வசித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து முதல்வர் மான் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
கலிபோர்னியாவில் எட்டு மாத குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கொல்லப்பட்ட செய்தி வருத்தமளிக்கின்றது.
மேலும், இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் பஞ்சாபியில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதலும் உயிரிழந்த சீக்கிய குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர கடத்தல் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துரைக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்தியுள்ளார்.