ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி, தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால், என்னுடைய கட்சித் தொண்டரின் திருமணத்திற்குச் செல்ல முடியாமல் நான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். முன்னாள் முதல்வரின் அடிப்படை உரிமையே எளிதாக பறிக்கப்படும்போது சாமானியர்களின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை' என்று குறிப்பிட்டார்.
ஆனால், மெஹபூபா முஃப்தியை வீட்டுச் சிறையில் வைக்கவில்லை. வாயிற்கதவுகளை அவரே போட்டுவிட்டு இவ்வாறு கூறுவதாக ஸ்ரீநகர் காவல்துறை பதில் அளித்திருந்தது.
ஆனால், காவல்துறை தான் வாசல் கதவுகளை உள்பக்கமாக பூட்டியதாகவும் காவல்துறை, வாய் கூசாமல் பொய் கூறுவதாகவும் தெரிவித்த முஃப்தி, சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய அமைப்புகளே வெட்கமின்றி தங்கள் தடங்களை மறைக்க முயல்வது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமித் ஷா 2 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.