ஜம்மு-காஷ்மீரில் விரைவில் வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் தொகுக்கும் பணி நிறைவடைந்த பிறகு அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் மூன்று நாள் பயணமாக அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார். இரண்டு நாள்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று பாரமுல்லாவில் நடைபெற்ற பேரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, வாக்காளர் அடையாள அட்டை தொகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் முடிந்தவுடன் ஜம்மு-காஷ்மீரில் வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீரை 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்துகின்றனர். ஆனால் பாகிஸ்தானுடன் பேசவேண்டிய தேவையில்லை. ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் தான் பேச வேண்டும். பாரமுல்லாவிலுள்ள குஜ்ஜார், பஹாரி, பாகர்வால் மக்களுடன்தான் பேச வேண்டும். காஷ்மீர் இளைஞர்களுடன்தான் பேச வேண்டும் எனக் குறிப்பிட்டார்.