ஐக்கிய ஜனதா தளக் கட்சியை வழிநடத்துமாறு நிதீஷ் குமார் கேட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தோ்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோா், தனது ‘ஜன் ஸ்வராஜ்’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் பிகாா் மாநிலம் மேற்கு சம்ரானில் உள்ள காந்தி ஆசிரமத்தில் இருந்து 3,500 கி.மீ தொலைவு நடைப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த் கிஷோர், தனது நடைப்பயணத்திற்கான நிதி குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.
அப்போது, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலன் சிங்கை விமர்சித்தார். தொடர்ந்து, '2014 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நிதீஷ் குமார் என்னிடம் வந்தார். பிகாரில் 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் 'மகாத்பந்தன்' கூட்டணி அமைத்து அவரது அரசை உருவாக்க நாங்கள் வேலை செய்தோம். ஆனால், இப்போது அவர் எனக்கு பாடம் எடுக்கிறார்' என்றார்.
மேலும் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி பாட்னாவில் நிதிஷுடனான தனது கடைசி சந்திப்பைப் பற்றி பேசிய கிஷோர், ஐக்கிய ஜனதா தளக் கட்சியை வழிநடத்துமாறு நிதீஷ் குமார் என்னை கேட்டார். ஆனால் நான் முடியாது என்று கூறிவிட்டேன்.
3,500 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு அனைத்து கிராம மக்களை சந்திப்பேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதை மாற்ற முடியாது' என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிகாரில் இன்றுமுதல் பிரசாந்த் கிஷோா் நடைப்பயணம்