பிரதமா் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுப் பொருள்களை மின்னணு முறையில் ஏலம் விடும் பணி வரும் அக்.12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயில், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயில் ஆகியவற்றின் மாதிரிகள், நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் உருவச் சிலை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
இவற்றை மின்னணு முறையில் ஏலம்விடுவதற்காக கடந்த செப். 17-ஆம் தேதி புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டது. இதில் பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட 1,200-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருள்கள் ஏலம் விடப்பட்டன. காமன்வெல்த் போட்டி, பாராலிம்பிக் , தாமஸ் கோப்பை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் பிரதமருக்கு பரிசாக வழங்கிய பொருள்களும் இவற்றில் அடங்கும்.
மின்னணு ஏலம் விடுதல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது வரும் அக்.12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பெறப்படும் நிதியானது கங்கை நதி தூய்மைப்படுத்தும் ‘நமாமி கங்கா’ திட்டத்துக்கு அளிக்கப்படும் என அத்துறையின் அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.