காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ராகுல் இன்று தனது 26-வது நாள் நடைப்பயணத்தில் உள்ளார். கர்நாடக மாநிலத்தில் இன்று 4 ஆவது நாள் யாத்திரையாகும்.
நேற்று மைசூரு பகுதியில் மேற்கொண்ட நடைப்பயணம் இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மைசூரு வந்துள்ளார்.
வருகிற வியாழக்கிழமை அவர் ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்குகொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி சமீபமாக கட்சி நிகழ்வுகளில் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றுமை நடைப்பயணம்
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 148 நாள்கள் காங்கிரஸ் குழுவினர் பயணம் செய்கின்றனர்.
தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம். பிறகு மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம். இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப். 10 வரை மொத்தம் 56 கி.மீ., கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.