புது தில்லி: நீங்கள் கடையில் வாங்கும் மருந்துகள் போலியானதா அல்லது தரமானதா என்பதை கண்டுபிடிக்க புதிய வசதி விரைவில் வருகிறது.
நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளின் தரம் மற்றும் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையிலும், போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கம் வகையிலும், டிராக் மற்றும் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருள்களின் லேபிள்கள் மீது பார்கோடு அல்லது க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்படவிருக்கிறது. அதாவது, மருந்து மற்றும் மாத்திரையின் முதல் டேபிளில் இந்த பிரிண்ட் இருக்கும்.
முதற்கட்டமாக, நாடு முழுவதும் அதிகம் விற்பனையாகும் நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி மாத்திரை, தொற்றுக்கு எதிரான நோய்கள் போன்றவை ஒரு மாத்திரை அட்டையின் விலை ரூ.100க்கு மேல் இருக்கும் மருந்துகளுக்கும் இந்த வசதி அறிமுகமாகிறது.
இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டாலும், போதிய தொழில்நுட்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாததாலும், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இற்குத் தயாராகாததாலும் இது இன்னமும் திட்டமிடுதலிலேயே இருக்கிறது. எனினும், தற்போது இது முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் இந்த தொழில்நுட்பக் கொண்டு வரப்படுவதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் போலி மருந்துகள் பெருமளவில் சந்தைகளில் கண்டெடுக்கப்பட்டன. அண்மையில் தைராய்டு பிரச்னைக்கும் க்ளென்மார்க் நிறுவனத்தின் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளும் போலியாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளில் விற்பனையானது பல்வேறு மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல், சில நிறுவனங்களுக்கு என தனித்தனியே பார்கோடுகள் வழங்கப்பட்டு, அதனை அந்தந்த நிறுவனங்கள் தங்களது மருந்துகளில் அச்சிட்டால், போலிகளை எளிதாக அடையாளம் காண வழி வகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நடவடிக்கை மூலம், மருந்து தயாரிப்பு செலவில் 3-4 சதவீதம் அதிகரிக்கும் என்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.