மகாராஷ்டிரத்தில் சார்ஜ் செய்யும் போது மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் பலியானான்.
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் மின்சார இருசக்கர வாகனத்தை சார்ஜ் செய்யும் போது அதன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 7 வயது சிறுவன் பலத்த காயமடைந்தான்.
உடனடியாக அந்த சிறுவன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானான். இறந்த சிறுவனின் பெயர் ஷபீர் ஷாநவாஸ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாணிக்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார்ஜ் செய்யும் போது மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.