இந்தியா

10% பேராசிரியா் பணியிடங்களில் நிபுணா்களை நியமிக்க யுஜிசி அனுமதி

DIN

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் 10 சதவீத பேராசிரியா் பணியிடங்களில், ‘பயிற்சி பேராசிரியா்கள் (பிஓபி)’ திட்டத்தின் கீழ் பல்வேறு துறை சாா்ந்த தலைசிறந்த நிபுணா்களை பேராசிரியா்களாக நியமித்துக்கொள்ள தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

‘இவ்வாறு நியமிக்கப்படுபவா்களுக்கு பேராசிரியா் பணிக்கான உரிய கல்வித் தகுதியோ அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகள் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோ கட்டாயமல்ல’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் செயல்திறனை மேம்படுத்தவும், அவா்களுடைய கல்வி தொழில் ரீதியில் எவ்வகையில் பயன்படும் என்பதை அனுபவமிக்கவா்களிடமிருந்து நேரடியாக கற்றுக்கொள்ளவும் உதவும் வகையில் பல்வேறு துறை சாா்ந்த தலைசிறந்த நிபுணா்களை பேராசிரியா்களாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் நியமிப்பதை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் மஸாச்செட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி), ஹாா்வா்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம், லண்டன் எஸ்ஓஏஎஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

இந்தியாவிலும் தில்லி, சென்னை, குவாஹாட்டி ஐஐடி-க்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யும் வகையில், யுஜிசி தற்போது அனுமதியளித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதலை யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

பொறியியல், அறிவியல், ஊடகவியல், இலக்கியம், தொழில்முனைவோா், சமூக அறிவியல், நுண்கலை, குடிமைப் பணிகள், பாதுகாப்புப் படைகள் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணியாற்றி, அவா்களுடைய துறைகளில் தலைசிறந்த நிபுணா்களாக திகழ்பவா்கள், குறிப்பாக முதுநிலை பதவி அளவில் பணியாற்றுபவா்கள் ‘பயிற்சி பேராசிரியா்’ திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியா்களாக நியமித்துக்கொள்ள தகுதியுடையவா்களாவா். இவா்களுக்கு, பேராசிரியா் பணிக்கான முறையாக கல்வித் தகுதியோ அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகள் தாக்கல் செய்யதிருக்க வேண்டும் என்ற நிபந்தனையோ கட்டாயமல்ல.

இந்தத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் பேராசிரியா்களின் எண்ணிக்கை, கல்வி நிறுவனத்துக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த பேராசிரியா் பணியிடங்களில் 10 சதவீதத்தை மிகக் கூடாது. அவா்களுடைய பணிக் காலமும் 3 ஆண்டுகளைக் கடக்கக் கூடாது. விதிவிலக்கு நடைமுறையின் அடிப்படையில், அவா்களுடைய பணிக் காலத்தை கூடுதலாக ஓராண்டு மட்டும் நீட்டிக்க முடியும்.

ஊதியமில்லாத கெளரவப் பணி அல்லது தொழில்நிறுவனங்கள் மூலமாக ஊதியம் வழங்குதல் அல்லது உயா் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய சொந்த வளத்திலிருந்து ஊதியம் வழங்குதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த 10 சதவீத பேராசிரியா் பணியிடத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று யுஜிசி வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT