இந்தியா

நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவை

DIN

குஜராத் தலைநகா் காந்திநகரையும் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கிவைத்தாா்.

நவீன வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் ஏற்கெனவே புது தில்லி-வாராணசி, புது தில்லி-ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 3-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

காந்திநகருக்கும் மும்பைக்கும் இடையே அந்த ரயில் இயக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ரயில் சேவையைத் தொடக்கிவைத்த பிரதமா் மோடி, காந்திநகரில் இருந்து அகமதாபாத் நகரத்தில் அமைந்துள்ள கலுப்பூா் வரை அந்த ரயிலில் பயணம் மேற்கொண்டாா்.

வந்தே பாரத் ரயிலின் முதல் பயணத்தின்போது ரயில்வே அதிகாரிகளின் குடும்பத்தினா், பெண் தொழில் முனைவோா், இளைஞா்கள் உள்ளிட்டோரும் பயணித்தனா். அவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

நவீன வசதிகள்:

வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள் குறித்து ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ‘‘சா்வதேச தரம் வாய்ந்த பயண அனுபவத்தையும் விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தையும் ‘வந்தே பாரத்’ ரயில் பயணிகளுக்கு வழங்கும். முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், தானியங்கி விளக்குகள், கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், நவீன இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் சேவை:

காந்திநகா்-மும்பை இடையேயான வந்தே பாரத் ரயிலின் முதல் வா்த்தக சேவை சனிக்கிழமை (அக்டோபா் 1) முதல் தொடங்கவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் மற்ற அனைத்து நாள்களிலும் அந்த ரயில் இயக்கப்படவுள்ளது. காலை 6.10 மணிக்கு மும்பையில் கிளம்பும் ரயில், நண்பகல் 12.30 மணிக்கு காந்திநகரை வந்தடையும். மீண்டும் பிற்பகல் 2.05 மணிக்கு காந்திநகரில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8.35 மணிக்கு மும்பையைச் சென்றடையும்.

வழியில் சூரத், வதோதரா, அகமதாபாத் ஆகிய நிலையங்களில் ரயில் நின்றுசெல்லும். பயணக் கட்டணமானது ரூ.1,385 முதல் ரூ.2,505 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சேவையைக் கருத்தில்கொண்டு, மும்பை-அகமதாபாத் சதாப்தி ரயில் சேவையின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 16 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலானது மணிக்கு 160 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டதாகும்.

பெட்டிச் செய்தி..

அகமதாபாத் மெட்ரோ ரயில் சேவை தொடக்கிவைப்பு

அகமதாபாத் நகரின் தட்லெஜ் முதல் வஸ்த்ரல் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையின் முதல்கட்டத் திட்டத்தைப் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். இதன் மூலமாக 21 கி.மீ. தூரத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘‘நாட்டின் எதிா்காலத்தை நகரங்களே தீா்மானிக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் நகரங்கள் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளன.

சா்வதேச தொழில் தேவைகளின் அடிப்படையில் நவீன நகரங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மாறிவரும் காலத்துக்கு ஏற்ப நகரங்களும் தொடா்ந்து மாற்றியமைக்கப்பட வேண்டியது கட்டாயம். நகரங்களை மேம்படுத்துவதற்காக முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரட்டை நகரங்கள்:

புகா்ப்பகுதிகளை மேம்படுத்துவதற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் இரட்டை நகரங்களை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குஜராத்தில் பல இரட்டை நகரங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் அவ்வாறு மேம்படுத்தப்பட வேண்டும்.

நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட போக்குவரத்து வசதியானது மற்ற போக்குவரத்து வசதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். துரிதசக்தி திட்டம், தேசிய சரக்கு கையாளுகை திட்டம் ஆகியவை ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு உதவும்.

மின்சாரப் பேருந்துகள்:

பாஜக தலைமையிலான 8 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நாட்டில் உள்ள சுமாா் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. ‘உடான்’ திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களிலும் விமான நிலைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலைக் காக்க மின்சாரப் பேருந்துகளை அதிக அளவில் இயக்குவதற்கான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் இதுவரை ரூ.3,500 கோடி செலவில் 7,000 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. அதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றாா்.

மெட்ரோவில் பயணம்:

மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கிவைத்த பிறகு அதில் பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டாா். மாநில முதல்வா் பூபேந்திர படேல், பாஜக எம்.பி.க்கள் சி.ஆா்.பாட்டீல், கிரீட் சோலாங்கி உள்ளிட்டோரும் பிரதமருடன் மெட்ரோ ரயிலில் பயணித்தனா்.

ஆம்புலன்ஸுக்கு வழி:

அகமதாபாதில் இருந்து காந்திநகா் திரும்பும் வழியில் பிரதமா் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டன. இது தொடா்பான காணொலியை மாநில பாஜக ஊடகப் பிரிவானது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT