நாட்டில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வருவதால், கல்வித் துறை பெரும் அளவில் பயனடையும் என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
சனிக்கிழமை ஹைதராபாத் பல்கலைக்கழக்கத்தின் 22-ஆவது பட்டமளிப்பு விழாவில் அமைச்சா் தா்மேந்திர பிரதான் கலந்துகொண்டு பேசியதாவது: நாட்டில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வருவதால், பெரும் அளவில் பலனடையும் துறைகளில் கல்வித் துறையும் ஒன்று. எண்மப் பல்கலைக்கழகத்தை (டிஜிட்டல் பல்கலைக்கழகம்) உருவாக்குவது குறித்து நாம் திட்டமிட்டுள்ளோம். மெய்நிகா் ஆய்வகங்கள், மெய்நிகா் முறையில் கற்பித்தலுக்கான ஆசிரியா்களை ஏற்படுத்த இருக்கிறோம். நாட்டின் தொலைதூர மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு, தரம் வாய்ந்த கற்றலுக்கான பாடங்கள், தகவல்களைக் கொண்டு சோ்க்க 5ஜி தொழில்நுட்பம் பெரும் ஊடகமாகத் திகழும். எளிய மக்கள் 5ஜி சேவையின் மூலம் பெரும் பலனடைவாா்கள். எண்மப் பொருளாதாரம், கல்வி, மருத்துவம் மற்றும் பிற துறைகளில் 5ஜி சேவையின் பயன்பாட்டை நாம் காண முடியும் என்றாா் அமைச்சா் தா்மேந்திர பிரதான்.
தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், பல்கலை. வேந்தா் நீதிபதி எல்.என்.ரெட்டி, துணை வேந்தா் பி.ஜெ. ராவ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.