ஆம் ஆத்மியின் தலைவர் மற்றும் தில்லியின் முதல்வரான அரவிந்த் கேஜரிவால் பல கனவுகள் மற்றும் பொய்களோடு குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: “ நர்மதா நதி நீர் குஜராத் மக்களுக்கு கிடைக்காமல் செய்ய முயற்சித்த கேஜரிவாலுக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள பெண்கள் ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள்.
இதையும் படிக்க: ஹிந்தி விக்ரம் வேதாவின் முதல் நாள் வசூல் ஏமாற்றமளித்ததா?
ஆம் ஆத்மி பாஜக தொண்டர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது. குஜராத் மக்கள் குறித்து பொய்களைக் கூறி குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார். ஆனால், அவர் எப்படி 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியிடம் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாரோ அதே நிலைதான் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்படும்.
அவர் இப்போது புதிய கனவுகள் மற்றும் பொய்களுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மக்களுக்காக வந்தே பாரத் எஸ்பிரஸ் ரயில் சேவையை பரிசளித்துள்ளார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால், ஆம் ஆத்மி தில்லியில் பேருந்து வாங்குவதில் ஊழல் செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு உதவித் தொகை வழங்குவது, இலவச மின்சாரம் வழங்குவது, இலவச கல்வி போன்ற அறிவிப்புகளை கேஜரிவால் தில்லி மாடல் என்ற பெயரில் அறிவித்து வருகிறார். ஆனால், அவர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் குஜராத் மாநிலம் ஏற்கனவே முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குஜராத் பெண்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்களை கேஜரிவால் முட்டாளாக்க முடியாது. அவர்கள் மீண்டும் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து பாஜகவினை குஜராத்தில் அமர வைக்கப் போகிறார்கள்.” என்றார்.