உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோயிலுக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து கோயிலுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பக்தர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிச்சரிவானது காலை 6.30 மணியளவில் கோயிலுக்கு பின்புறம் நிகழ்ந்துள்ளது. கோயிலின் பின்புறம் உள்ள பனிமலையில் இருந்து மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று சரிந்து சோரபாரி ஏரியில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தினால் கோயிலுக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: புடவையை இப்படியா கட்டுவது?: ஸ்ரேயாவின் அதிரடி படங்கள்!
இந்த சம்பவம் குறித்து கேதார்நாத் கோயில் நிர்வாகத் தலைவர் அஜேந்திரா அஜய் கூறியதாவது: “ உடைந்து விழுந்த இந்த பனிப்பாறையினால் மண்டகினி மற்றும் சரஸ்வதி ஆற்றில் வரும் நீரின் அளவில் மாற்றம் இல்லை. அதனால் இந்த சம்பவம் குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புக் குழுவினர் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் கோயிலில் இருந்து நீண்ட தூரத்தில் இமயமலைப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இமயமலைப் பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகளை பொதுவாக காண முடியும். அதனால் பக்தர்கள் யாரும் தங்களது பயணத் திட்டங்கள் குறித்து அச்சமடைய வேண்டாம்.” என்றார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பனிச்சரிவில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.