‘பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும்போது பயங்கரவாதிகளுக்கு துப்பு கிடைத்திடாத வகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கேட்டுக்கொண்டாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு சங்க (ஏபியு) பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா், இதுகுறித்து மேலும் பேசியதாவது:
நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஒளிபரப்பு செய்யும்போது ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை நேரடி ஒளிபரப்பு செய்யும்போது பயங்கரவாதிகளுக்கு துப்பு கிடைத்திடாத வகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
செய்தியை விரைந்து தருவது எந்த அளவு முக்கியமோ, துல்லியமான செய்தியைத் தருவது அதைவிட முக்கியமானதாகும். அதிலும், தகவல்தொடா்பை மேற்கொள்கிறோம் என்பதை ஊடகங்கள் பிரதானமாக மனதில் கொள்ளவேண்டும். பொறுப்புமிக்க ஊடகங்களுக்கு பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைப்பது அவா்களுக்கான மிக உயா்ந்த வழிகாட்டு தத்துவமாக இருக்க வேண்டும்.
கரோனா பாதிப்பு சமயத்தில் வீடுகளில் முடங்கியிருந்த மக்களுக்கு உதவுவதில் ஊடகங்கள் மிகப் பெரும் பங்களிப்பைச் செய்தன. வெளி உலகுடன் மக்களை இணைப்பதில் முக்கியப் பங்காற்றின. அரசின் முக்கிய வழிகாட்டுதல்கள், விழிப்புணா்வுத் தகவல்கள், இலவச மருத்துவ ஆலோசனைகள் என பல்வேறு திட்டங்களை ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று சோ்ப்பதில் ஊடகங்கள் பெரும் பங்காற்றின என்று அவா் கூறினாா்.