இந்தூர்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றது முதல், தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மனம் திறந்து பேசியுள்ளார்.
செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு ஞாயிறன்று இந்தூர் நகருக்குள் நடைப்பயணம் நுழைந்தது.
இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி
திங்கள்கிழமை இந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம், இந்த பயணத்தின்போது நீங்கள் மிகவும் திருப்திகரமாக உணர்ந்தது எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது, அப்படி நிறைய இருக்கிறது சொல்வதற்கு, ஆனால், நான் ஒரு சில விஷங்களை இங்கே நினைவுகூரலாம். அதில் மிக முக்கியமானது இந்த நடைப்பயணம் தொடங்குவதற்கு முன்பிருந்ததை விட தற்போது எனது பொறுமை அதிகரித்துள்ளது.
இரண்டாவது, என்னை எட்டு மணி நேரம் யாராவது இழுத்தாலும் தள்ளினாலும் கூட எரிச்சலடையமாட்டேன். ஆனால் முன்பெல்லாம் இரண்டு மணி நேரத்தில் என்னை யாராவது இடித்தால் கூட எரிச்சல் வந்துவிடும்.
இந்த நடைப்பயணத்தில் இணைந்து நடந்தீர்களானால், மிகக் கடுமையான வலி ஏற்படும். அந்த வலியை தாங்கிக் கொள்ள வேண்டுமே தவிர, இதனை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் பிறக்கும்.
மூன்றாவதாக, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கும் திறன் அதிகரித்திருக்கிறது. என்னிடம் யாராவது வந்து பேசினால், தற்போது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை பொறுமையோடு முழுமையாகக் கேட்க முடிகிறது. இவை அனைத்துமே எனக்கு மிகுந்த பலனளிப்பவை என்று விவரித்துள்ளார்.
இந்த நடைப்பயணத்தைத் தொடங்கிய போது, முன்பு ஏற்பட்ட காயத்தால் முட்டிகளில் வலி ஏற்பட்டது. அப்போது எனக்கு ஒரு அச்சம் வந்தது. இந்த வலியோடு நடக்க முடியுமா? நடைப்பயணத்தை தொடர முடியுமா என்றெல்லாம். ஆனால், அந்த பயத்தை நான் எதிர்கொண்டேன். தொடர்ந்து நடந்தேன். பிறகு அந்த பயம் நீங்கிவிட்டது.
எப்போதும் நல்ல நிகழ்வுகள் நடக்கும், ஏதேனும் ஒன்று உங்களை துன்புறுத்தலாம், ஆனால் அதனை ஏற்க பழகிக் கொள்ள வேண்டும் என்றும் ராகுல் கூறியுள்ளார்.