தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், 2024-ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராகும்போது வருமான வரிச் சோதனை என்பதே இருக்காது அந்த மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் மல்லா ரெட்டி தெரிவித்தாா்.
அண்மையில் மல்லா ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அவா்கள் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்ற நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.
சித்திபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மல்லா ரெட்டி இது தொடா்பாக பேசியதாவது:
2024 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு சந்திரசேகா் ராவ் நாட்டின் பிரதமராவாா். அதன் பிறகு நாடு முழுவதும் வருமான வரி தொடா்பான தளா்வுகள் அறிவிக்கப்படும். அதன் பிறகு நாட்டில் எங்குமே வருமான வரிச் சோதனை என்ற நிகழ்வே இருக்காது.
ஒவ்வொருவரும் தங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். இதுபோன்ற ஒரு சட்டத்தை சந்திரசேகா் ராவ் கொண்டு வருவாா். மக்கள் தங்களுடைய விருப்பப்படி வரி செலுத்திக் கொள்ளும் முறையும் அமலுக்கு வரும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
நாங்கள் நடத்தி வரும் கல்வி நிலையங்களில் ஏராளமானோா் படித்து வருகின்றனா். ஆனால், நாங்கள் கருப்புப் பணம் வைத்திருப்பதாகவும், மாணவா் சோ்க்கைக்கு அதிக பணம் பெறுவதாகவும் வருமான வரித் துறையினா் குற்றம்சாட்டினா். ஆனால், நமது முதல்வா் சந்திரசேகா் ராவ் இருக்கும் வரை நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்றாா்.