குஜராத்தில் பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில், ஜெய்நாராயண் வியாஸ் தனது மகன் சமீர் வியாஸுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் உடனிருந்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஜெய்நாராயண் வியாஸ் பாஜகவில் இருந்து விலகுவதாக கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்.
மேலும் 'குஜராத்தில் சித்பூர் தொகுதியில் போட்டியிட அரசியல் செய்கிறார்கள். தலைவர்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு இலக்காக வைக்கிறார்கள். எனவே பாஜகவில் இருந்து விலகுகிறேன்.
சித்பூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். ஆனால், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை. நான் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைப்பேன்' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து சித்பூர் தொகுதியில் போட்டியிட வியாஸுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான பிரசாரம் நாளை(நவ.29)யுடன் முடிகிறது.
இதையும் படிக்க | ஒண்ணுமே புரியல! குஜராத்தில் ஒரேமாதிரி வாக்குறுதிகளை அளித்த கட்சிகள்!