இடுக்கி மாவட்டத்தில் மத்திய அரசின் சுற்று சூழல் உணர்திறன் மண்டலமாக அமல்படுத்துவதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் அறிவித்ததால் தமிழக-கேரள எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இடுக்கி மாவட்டத்தை சுற்று சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய வனத்துறை அமைச்சகத்தினர் அறிவித்துள்ளனர். அதன் பேரில் வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோ மீட்டர் தூரம் எல்கைக்குள், குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் இருக்கக் கூடாது, புதியதாக கட்டடம் கட்ட அனுமதி கிடையாது, ஏற்கெனவே உள்ளவைகள் அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைக் கண்டித்து காங்கிரஸ், கேரள காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திங்கள்கிழமை வேலை நிறுத்தம் அறிவித்தனர்.
அதன்பேரில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு செல்லும் லோயர்கேம்ப் கம்பம் மெட்டு சாலைகளில் வாகனங்கள் செல்லவில்லை. கேரளம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் கம்பம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. இவர்களை ஏற்றி செல்லும் சுமார் 800 ஜீப் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
குமுளி, வண்டிப் பெரியாறு, கட்டப்பனை, புளியமலை, லண்டன் மேடு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு, தனியார் பேருந்துகள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. அதே நேரத்தில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அவர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.