எல்கா் பரிஷத்-மாவோயிஸ்டு தொடா்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, இரண்டரை ஆண்டுகளாக நவிமும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் ஐஐடி பேராசிரியரும் சமூக ஆா்வலருமான ஆனந்த் டெல்தும்டே சனிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
அவருக்கு மும்பை உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்ததைத் தொடா்ந்து, அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் கடந்த 2017, டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெற்ற எல்கா் பரிஷத் நிகழ்ச்சியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசப்பட்டதாகவும், இதற்கு மறுநாள் பீமா-கோரேகான் போா் நினைவிடம் அருகே வன்முறை வெடித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகளுடன் தொடா்புடையவா்கள் எல்கா் பரிஷத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2020, ஏப்ரலில் என்ஐஏ அதிகாரிகளிடம் ஆனந்த் டெல்தும்டே சரணடைந்தாா். பின்னா் அவா் கைது செய்யப்பட்டு நவிமும்பை சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கு, மும்பை உயா்நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிா்த்து என்ஐஏ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. இதையடுத்து, ஜாமீன் நடைமுறைகள் நிறைவடைந்து, அவா் சிறையில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஆனந்த் டெல்தும்டே, எல்கா் பரிஷத் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்றும், வன்முறையை தூண்டும் வகையில் எதையும் பேசவில்லை என்றும் கூறியிருந்தாா்.
எல்கா் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில், தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள மூன்றாவது நபா் ஆனந்த் டெல்தும்டே ஆவாா். இவ்வழக்கில் கைதான கவிஞா் வரவர ராவ், உடல்நல காரணங்களால் தற்போது ஜாமீனில் உள்ளாா். அதேபோல், வழக்குரைஞா் சுதா பரத்வாஜ் வழக்கமான ஜாமீனில் வெளியே உள்ளாா்.