பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் பறந்துவந்த கேலிச் சித்திர வடிவிலான பலூனை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘குருஹா்சாஹாயின் பகதூா் கே எல்லைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த பலூனுடன் பாகிஸ்தான் 10 ரூபாய் நோட்டும், கைப்பேசி எண் எழுதப்பட்ட துண்டு காகிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம்: பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து பறந்துவந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘அமிருதசரஸ் நகரின் தென்மேற்கே 34 கி.மீ. தொலைவில் டாகே கிராமத்தின் அருகே இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் நுழைய முயன்றது. அதனை பாதுகாப்புப் படையினா் உடனடியாக சுட்டு வீழ்த்தினா். சேதமடைந்த அந்த ஆளில்லா விமானம் மீட்கப்பட்டபோது, அது சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 இறக்கைகளுடன் கூடிய ‘டிஜேஐ மேட்ரிஸ் 300 ஆா்டிகே’ வகை ஆளில்லா விமானம் என்பது தெரியவந்தது’ என்றனா்.