இந்தியா

தீவிரவாதத் தாக்குதல்களுக்கு காங்கிரஸ் ஒருபோதும் கண்டனம் தெரிவித்ததில்லை: அமித் ஷா

DIN

வாக்கு வங்கி அரசியலுக்காக தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக ஒருபோதும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களைக் கொல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் ஒருபோதும் பாகிஸ்தானின் இந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர் இதனை தெரிவித்தார்.

2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி தாஜ் ஓட்டல், சத்ரபஜி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட மும்பையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.

மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மும்பை தீவிரவாதத் தாக்குதல் போன்றவை காங்கிரஸ் ஆட்சியில் நடப்பதற்கு வாய்ப்பு இருந்த போதிலும், இன்று இதுபோன்ற தாக்குதல்கள் நடக்க வாய்ப்பில்லை. அதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசே ஆகும்.

கடந்த 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களைக் கொல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சில நேரங்களில் இந்திய ராணுவ வீரர்களின் தலையினையும் துண்டித்துள்ளனர். இருப்பினும், காங்கிரஸ் அது குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதற்கு காரணம் அவர்களது வாக்கு வங்கி அரசியல். காங்கிரஸின் வாக்கு வங்கி யார் என உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நான் நம்புகிறேன்.

உரி மற்றும் புல்வாமாத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்ததன் மூலம் இந்த உலகிற்கு தீவிரவாதத்திற்கு எதிரான செய்தியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உரக்கச் சொன்னது. அதேபோல ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 இந்தியாவின் முதல் பிரதமர் செய்த தவறு. அதனை 70 ஆண்டுகளாக காங்கிரஸ் சரி செய்யவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு நமது பிரதமர் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி ஜம்மு-காஷ்மீரை உண்மையில் இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றினார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT