அரசிலமைப்பை கண்டுகொள்ளாமல் செயல்படும் பாஜக தலைமையிலான அரசு அரசியலமைப்பு நாளை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் 1949ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 26 அரசியலமைப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. முன்னதாக, இந்த நாள் சட்ட தினமாக அனுசரிக்கப்பட்டது.
அரசியலமைப்பு நாள் இன்று (நவம்பர் 26) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், பாஜக அரசியலமைப்பு நாளைக் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்டு வரும் பாரதத்தை இணைப்போம் நடைப்பயணத்தில் கலந்துகொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் முற்றிலுமாக அரசியலமைப்பில் நம்பிக்கை கிடையாது. அவர்கள் அரசியலமைப்பை மதிப்பதும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை. மாறாக அரசியலமைப்பை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.