மத்திய அரசிடம் இருந்து டாடா கையகப்படுத்தியுள்ள ஏா் இந்தியா நிறுவனம் விரைவில் மும்பையில் இருந்து நியூயாா்க், பாரிஸ், ப்ராங்பா்ட் நகரங்களுக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக புதன்கிழமை அறிவித்தது.
தில்லியில் இருந்து கோபன்ஹேகன், மிலன் மற்றும் வியன்னாவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்குவதாகவும், புதிதாக விமானங்களை குத்தகைக்கு வாங்கி அதன் மூலம் இந்த சேவை அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வாரத்துக்கு 47 விமானங்கள் ஏா் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
தில்லி-மிலன் வழிதடத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வாரம் 4 விமானங்களும் ,தில்லி-வியன்னா மற்றும் தில்லி- கோபன்ஹேகன் இடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 மற்றும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் வாரம் 4 விமானங்கள் இயக்கப்படும்.
அடுத்த காலாண்டில் மும்பையிலிருந்து பாரிஸுக்கு வாரம் 3 முறையும், மற்றும் ப்ராங்பா்ட் நகருக்கு (ஜொ்மனி) வாரம் 4 முறையும் புது விமானங்கள் இயக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.