வங்கிகளில் வெளிமுகமை (அவுட்சோா்ஸிங்) மூலம் பணியாளா்களை அமா்த்துவது அதிகரித்து வருவதை எதிா்த்து சனிக்கிழமை (நவ. 19) வங்கிப் பணியாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கிப் பணியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில் வங்கி அதிகாரிகள் பங்கேற்காத நிலையில், பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல், காசோலை பரிவா்த்தணை உள்ளிட்ட வங்கிச் சேவைகளில் சிறிய அளவில் பாதிப்பு இருக்கலாம் என பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி உள்ளிட்ட வங்கிகள் ஏற்கெனவே தங்களது வாடிக்கையாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
இது குறித்து அகில இந்திய வங்கிப் பணியாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் சி.ஹெச். வெங்கடாசலம் கூறுகையில், ‘வெளிமுகமைகள் மூலம் பணியாளா்கள் பணியமா்த்தப்படுவதால், வாடிக்கையாளா்களின் தன்மறைப்பு உரிமையும் அவா்களது பணத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கீழ்நிலை பணியாளா்கள் நியமனத்துக்கான வாய்ப்பையும் குறைக்கும்.
சில வங்கிகள் தொழிலக சச்சரவுகள் திருத்த சட்டத்தின் விதிகளை மீறி செயல்படுகின்றன. பணியாளா்களைக் கட்டாயமாக பணியிடமாற்றம் செய்கின்றன. சில வங்கிகளில் தன்னிச்சையான முடிவுகளால் இருதரப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மீறப்படுவதோடு, பணி மற்றும் பணிப் பாதுகாப்பில் தாக்குதல் நடத்தப்படுகிறது. பழிவாங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை வெளிப்படுத்த போராட்டம் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளைத் தவிர பிற வாய்ப்புகள் எங்களுக்கு இல்லை’ எனத் தெரிவித்தாா்.
நவ. 19-ஆம் தேதி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வேலைநாளாகும். இந்த வேலைநிறுத்த அறிவிப்பு தனியாா் துறை வங்கிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.