லடாக் வேன் ஆற்றில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் பலியான ராணுவ வீரர்களுக்கு இந்திய அணியின் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி உட்பட பலரின் இரங்கல் தெரிவித்தது பின்வருமாறு:
விராட் கோலி: இந்திய ராணுவ வீர்களின் இறப்புச் செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். அவர்களை பிரிந்து வாடும் வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த விபத்தில் பலத்த காயமடைந்துள்ள மற்ற ராணுவ வீரர்கள் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
ஹர்பஜன் சிங்: லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு நிகழ்ந்த சாலை விபத்து குறித்து அறிந்தவுடன் நான் மிகுந்த துயரத்திற்கு ஆளானேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசம் உங்களுடன் நிற்கும்.
கௌதம் கம்பீர்: லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு நிகழ்ந்த துயரம் குறித்து அறிந்தவுடன் மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் இந்தத் தேசம் துணை நிற்கும். இந்த விபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற விருப்பப்படுகிறேன்.
நேற்று வெள்ளிக்கிழமை (மே 27) லடாக்கில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வேன் நிலைதடுமாறி டுர்டுக் எனுமிடத்தில் ஷயோக் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் காலை 9 மணியளவில் ஏற்பட்டுள்ளது. வேன் அதிக ஆழத்தில் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் 19 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.