தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் உள்ள உணவக அறையில் தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சிவம் பள்ளியைச் சேர்ந்த சுப்பிரமணியன் ராஜேஷ்(45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த மே 19ம் தேதியன்று உணவகத்தில் அறை எடுத்து தங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷ்னர் சி.மனோஜ் கூறுகையில்,
மஹிபால்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் உள்ள அறையில் கடந்த ஒரு வாரமாகத் தங்கியிருந்த ஒருவர், சுயநினைவின்றி இருப்பதாக எங்களுக்கு அழைப்பு வந்தது.
ராஜேஷ் குளியலறை கதவுக்கு அருகில் மயங்கிக் கிடந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திலிருந்து காலி மதுபான பாட்டில்களை கைப்பற்றினர்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சப்தர்ஜங் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் எதற்காக தெலங்கானாவில் இருந்து தில்லியில் அறை எடுத்து தங்கினார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வந்தவுடன் சடலம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.