பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இன்று ஹைதராபாத் வந்த நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பெங்களூரு சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று(வியாழக்கிழமை) மாலை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் வந்திருந்தார். ஹைதராபாத்தில் உள்ள 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்' கல்வி நிறுவனத்தின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வருகை நேரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசுவாமியும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தார்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முனைப்பில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது இரண்டாவது முறையாக அவரை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதமும் பிரதமர் மோடி ஹைதராபாத் வருகையின்போது உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் சந்திரசேகர் ராவ் பிரதமரை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.