பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டதாக 6 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு மாவோயிஸ்ட் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 500க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவரான சந்தீப் யாதவ் என்ற விஜய் யாதவ்(55) நேற்று பிகாரில் உள்ள கயா பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் இறந்தது விஜய் யாதவ் தான் என்பதை அவர் மகன் உறுதி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முகத்திலும் கைகளிலும் கடுமையான காயங்கள் இருப்பதால் உடற்கூறாய்வில் உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என காவலர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கயா மற்றும் ஒளரங்கபாத் மாவட்டத்திலிருந்த யாதவ் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்தது.
விஜய் யாதவின் மனைவி கயா மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.