உத்தரப் பிரதேசத்தில் புலந்த்ஷாஹர்-மீரட் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட்டில் உள்ள கேதார்நாத் புனிதத் தலத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது புலந்த்ஷாரின் குலாவதி பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் காரில் பயணித்தனர். அப்போது கார் டிரக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மாவட்ட நீதிபதி சந்திர பிரகாஷ் சிங் கூறினார்.
காயமடைந்தவர்களில் 3 பேர் மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட, மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சிங்குடன் தானும் களத்தில் இருந்ததாக மாவட்ட நீதிபதி கூறினார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹர்திக் (6), வான்ஷ் (5), ஷாலு (21), ஹிமான்ஷு (25) மற்றும் பராஸ் (22) என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.