தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினர்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சனிக்கிழமை தில்லி சென்றார். அவருடன் அமைச்சர் பிரசாந்த் ரெட்டி, எம்.பி.க்கள், எம்எல்ஏ உள்ளிட்டோர் தில்லி சென்றனர். சனிக்கிழமை அரவிந்த் கேஜரிவாலைச் சந்தித்தார் சந்திரசேகர ராவ்.
இதையடுத்து, இருவரும் தெற்கு மோதிபாக் பகுதியிலுள்ள சர்வோதயா பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். தில்லியிலுள்ள பள்ளி திட்டங்களை தெலங்கானாவுக்கும் எடுத்துச் செல்வதாக சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
இந்த நிலையில், இருவரும் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். சந்திப்பின்போது தேசிய அரசியல், கூட்டாட்சி, இந்தியாவின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு, மத்திய அரசின் கொள்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.