முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனக்கும், பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தில்லியில் மலரஞ்சலி செலுத்தினர்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜீவ் காந்தி குறித்து விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ராகுல் ட்விட்டர் பதிவு:
"எனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது கொள்கைகள் நவீன இந்தியா உருவாவதற்கு உதவின. அவர் இரக்கமுள்ள, கனிவான மனிதர். எனக்கும், பிரியங்காவுக்கும் மன்னிப்பு மற்றும் மற்றவர் உணர்வுகளைப் புரிந்துகொள்வதன் மதிப்பைக் கற்றுக்கொடுத்த மிகச் சிறந்த தந்தை.
நாங்கள் ஒன்றாக செலவழித்த நேரங்களை அன்புடன் நினைவுகொள்கிறேன்."
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்ததற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், ராஜீவ் காந்தி மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.