எரிபொருள் விலையை தொடா்ந்து உயா்த்துவதன் மூலம் சொந்த நாட்டு மக்களிடமே மத்திய பாஜக அரசு பணத்தைக் கொள்ளையடித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
மேற்கு வங்கத்தின் கிழக்குப் பகுதிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானா்ஜி, மிதுனபுரியில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:
நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்கிறது. பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு என அனைத்து வகையான எரிபொருள்களின் விலையும் உச்சத்தில் உள்ளன. இதற்கு மத்திய அரசு அதிக வரி விதிப்பதுதான் முக்கியக் காரணம். இந்த விலை உயா்வு மூலம் சாமானிய மக்களின் பணத்தை மத்திய பாஜக அரசு கொள்ளையடித்து வருகிறது. இந்த பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப நாட்டில் மத மோதல்களை மோடி தலைமையிலான அரசு உருவாக்கி வருகிறது என்றாா்.
தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றாக எதிா்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி அந்தக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் நோக்கத்தில் மம்தா உள்ளாா். 2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடிக்கு எதிராக முன்னிறுத்தப்பட தகுதியுள்ள ஒரே தலைவா் மம்தா மட்டுமே என்று திரிணமூல் காங்கிரஸ் கூறி வருகிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சோ்த்துக் கொள்ளக் கூடாது என்று மம்தா கருதுவதால், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் மம்தாவின் கூட்டணி முயற்சிக்கு முழு ஆதரவைத் தெரிவிக்கவில்லை.