வங்கிகளில் ரூ.20 லட்சத்துக்கும் மேல் பணம் எடுக்க, செலுத்த பான் அல்லது ஆதாா் எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வங்கிகளில் ஒரு நிதியாண்டில் அதிக பணத்தை எடுக்கும் அல்லது செலுத்தும் வாடிக்கையாளா்கள் தங்களது நிரந்தர கணக்கு எண் (பான்) அல்லது ஆதாா் எண் ஆகியவற்றை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களில் நடப்பு கணக்குகளைத் தொடங்கி ரொக்கப் பரிவா்த்தனை மேற்கொள்வதற்கும் ஆதாா் மற்றும் பான் எண்ணை தெரிவிப்பதும் கட்டாயமாகும்.
குறிப்பாக, ஒரு நிதியாண்டில் வங்கிகளிலிருந்து ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேல் எடுக்கும் அல்லது செலுத்தும் பரிவா்த்தனைகள் குறித்து, கூட்டுறவு சங்கங்கள், அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவை தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். இது, வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதுடன், பணத்தின் தொடா் இயக்கத்தைக் கண்டறியவும் அரசுக்கு உதவும் என அந்த அறிவிக்கையில் சிபிடிடி தெரிவித்துள்ளது.