தற்போதுள்ள விமானக் கட்டண வரம்பானது பயணிகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.
உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை கரோனா பரவலுக்கு முன்பிருந்த நிலையை கிட்டத்தட்ட எட்டியுள்ளது. சில நாள்களில் அந்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. எனினும் விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்கள் அந்த எரிபொருளுக்கு வசூலிக்கும் வரிகளைக் குறைத்துள்ளன.
இந்நிலையில், தில்லியில் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
கரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புக்குப் பின்னா், விமானப் போக்குவரத்துத் துறை ஸ்திரத்தன்மைக்குத் திரும்பி வருகிறது. எனினும் விமான எரிபொருள் விலை இன்றளவும் அதிகமாக உள்ளது. அதன் தாக்கத்திலிருந்து பயணிகளையும், விமான நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. விமானப் போக்குவரத்து சூழல் ஸ்திரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள விமானக் கட்டண வரம்பு பயணிகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. குறிப்பாக பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கிறது. நாட்டில் விமான நிறுவனங்கள் பெருக வேண்டும் என்று தெரிவித்தாா்.