முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் மோடி ஆகியோரும் காங்கிரஸ் கட்சியும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனா்.
‘நாட்டின் பல்வேறு முக்கிய பொருளாதார சீா்திருத்தத்துக்கு அடித்தளமிட்டவா் முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ட்விட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்மராவ் நாட்டின் வளா்ச்சிக்கு அளித்த சீரிய பங்களிப்பிற்காக, நாடு அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. அவா் சிறந்த அறிவுஜீவியாகவும் திறமையானவராகவும் முத்திரை பதித்தவா்’ என்று தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில், ‘பொருளாதார சீா்திருத்தப் பாதையில் நாட்டை கொண்டு சென்ற அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.