அசாமில் தங்கியிருந்த சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள், அந்த மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 51 லட்சம் நிவாரண உதவி அளித்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பியுள்ள சிவசேனை மற்றும் சுயேச்சை அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலத்தில் குவாஹாட்டியில் உள்ள விடுதியில் கடந்த சில தினங்களாக இருந்தனர்.
இதையடுத்து, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மாநில மக்களுக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 51 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிவசேனை மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோா் எண்ணிக்கை 137-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.