பத்திரிகையாளர்கள் என்ன எழுதுகிறார்கள், ட்வீட் செய்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை கைது செய்யக்கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ல் மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகக் கூறி தனியார் பத்திரிக்கை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகம்மது ஸுபைர் திங்கள்கிழமை இரவு தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முகம்மது ஸுபைர் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானே டுஜாரிக், 'பத்திரிகையாளர்கள் என்ன எழுதுகிறார்கள், என்ன ட்வீட் செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை கைது செய்யக்கூடாது. உலகின் எந்த பகுதியிலும் மக்கள் அனைவரும் பயமின்றி எந்தவித அச்சுறுத்தலுமின்றி தங்கள் கருத்துகளை வெளிப்படையாகக் கூற அனுமதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மேலும், முகம்மது ஸுபைர் கைதுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததுடன் அவரை விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.
இதையும் படிக்க | 'உண்மையான ஒரு குரலை அடக்கினால் ஆயிரம் குரல்கள் எழும்' - பத்திரிகையாளர் கைது குறித்து ராகுல் காந்தி