தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் ஜியோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து முகேஷ் அம்பானி நேற்று விலகியதாக ஜியோ நிறுவனம் இன்று (ஜூன் 28 )அறிவித்துள்ளது.
முகேஷுக்கு பதிலாக அவருடைய மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, ஜியோ நிறுவனத்தின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜியோ, நாடு முழுவதும் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இதன் தலைவராக 65 வயதான முகேஷ் அம்பானி இருந்து வந்தார். தற்போது அவரது மகன் ஆகாஷ் அம்பானி தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இது தொடர்பாக நேற்று (ஜூன் 27) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள ஆகாஷ் அம்பானியை, ஜியோ நிறுவனத்தின் தலைவராக்க முடிவு செய்யப்பட்டதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் புதிய நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ரமீந்தர் சிங் குஜ்ரால், கே.வி.செளத்ரி ஆகியோர் அடுத்தக்கட்ட பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகன்கள் குறித்து நெகிழ்ச்சி
தொழில்களை தலைமையேற்று நடத்துவதில் எனது மகன்களிடம் மிகுந்த ஆர்வம் இருப்பதாக கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். மகன்களிடம் எனது தந்தையும் ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவருமான திருபாய் அம்பானியின் வேகம் இருப்பதை உணர்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நிறுவனத்தை வழிநடத்துவார்கள் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.