சிவசேனை அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை செயலகத்தின் தகுதிநீக்க நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், மும்பையில் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் இல்லத்தில், பாஜக மூத்த தலைவா்கள் நேற்று(திங்கள்கிழமை) கூடி ஆலோசனை மேற்கொண்டனா்.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவா் சுதீா் முங்கன்டிவாா், பின்னா் செய்தியாளா்களிடம் “உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இந்த விவகாரத்தில் பொறுத்திருந்து பாா்க்கலாம் என முடிவு செய்துள்ளோம். இதுவரை ஏக்நாத் ஷிண்டேயுடன் நாங்கள் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. அவரிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் பெறவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக தனக்கு ஆதரவளித்து வரும் எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் முக்கியமான முடிவும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.