கர்நாடகத்தின் கௌரிபிதனூர் கிராம காவல் நிலையத்தில் எலிகளுக்கு பயந்து பூனைகளை வளர்த்து வருகின்றனர் காவல்துறையினர்.
சிக்கபலாபுரா மாவட்டம் கௌரிபிதனூர் காவல் நிலையத்தில் எலிகள் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும், காவல் நிலையத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை எலிகள் கடித்து நாசம் செய்துள்ளது. ஒரு இடம் விடாமல் காவல் நிலையம் முழுவதும் எலிகள் சுற்றித் திரிந்தன.
இதனால், காவல்துறையினர் தேவையின்றி சங்கடங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்த காவல்துறையினர், கடைசியில் எலிகளைக் கட்டுப்படுத்த பூனையால் மட்டும் தான் முடியும் என்று முடிவுக்கு வந்தனர். வேறு வழியின்றி இறுதியாக, இரண்டு பூனைகள் காவல் நிலையத்திற்குக் கொண்டுவந்தனர்.
இப்போது எலிகளை கண்டு பயப்படத் தேவையில்லை. எல்லாம் பூனைகள் பார்த்துக்கொள்ளும். எங்கள் பணி சுமுகமாக நடந்து வருவதாக போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பூனைகள் தற்போது காவல் நிலையத்தின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. எலியின் அச்சுறுத்தலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.