தில்லியில் மதம் குறித்து சிறுமியிடம் அவதூறாக பேசிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தில்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தில்லியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமியிடம் மர்ம நபர் ஒருவர் மதம் குறித்து அவதூறான கருத்துக்களை கூறும் விடியோ இணையத்தில் வைரலானது.
சிறுமி சார்ந்துள்ள மதத்திற்குட்ட கடவுள் குறித்து சிறுமியிடம் தகாதவாறு பேசி, சிறுமியை வசைச்சொற்களால் துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து இந்த விடியோவில் உள்ள நபர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், மதம் சார்ந்து அவதூறான பேச்சுக்களை சிறுமியிடம் அந்த நபர் பேசுகிறார். தகாத வார்த்தைகளால் சிறுமி அச்சமுற்றிருப்பது விடியோவில் தெளிவாகத் தெரிகிறது. மேலும் அருகில் உள்ள சிறுவனிடமும் அந்த நபர் அவ்வாறே மதம் சார்ந்த அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்கிறார். இதனால் அந்த நபர் மீது தில்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.