கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது மனைவி கமலா, மகள் வீனா உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்தார்.
படிக்க | தங்கக் கடத்தல் வழக்கில் பினராயிக்கு தொடர்பு: ஸ்வப்னா வாக்குமூலம்
இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது அவர்களின் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான். பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள்தான். குற்றவாளிகள் மூலம் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி முன்வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டில் எந்தவொரு உண்மையும் இல்லை. இவ்வாறு குற்றம் சுமத்துவதன் மூலம் அரசின் உறுதித் தன்மையையும், அரசியல் தலைமையையும் அசைத்துவிடலாம் என்று கருதுகின்றனர். ஆனால் இது வீண் முயற்சி என்பதை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என பதிலளித்துள்ளார்.