இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதையும் படிக்க:இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்: தொழில் நுட்பக் கோளாறா?
நாடாளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக திமுக மற்றும் அதிமுக சார்பில் இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இலங்கையில் இருக்கும் தமிழர்களின் நிலை குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து இன்று (ஜூலை 17) பேசிய அதிமுக தலைவர் தம்பிதுரை, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்து வரும் தீவு நாடான இலங்கையின் விவகாரத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க:கோதாவரியில் வெள்ளம்: ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா கடும் பாதிப்பு
இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது. இலங்கையில் அந்நிய செலாவணிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே போல உணவு மற்றும் எரிபொருள்களின் விலைவும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இலங்கை விவகாரம் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.