மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை புதன்கிழமை (ஜூலை 7) ராஜிநாமா செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜிநாமா செய்துள்ளார்.
பிகார் மாநிலத்திலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அமைச்சர் பதவியை இன்று (ஜூலை 7) ராஜிநாமா செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் முக்தார் அப்பாஸ் நக்வி வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி உள்பட பல முக்கிய கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பாஜக சார்பில் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் பொறுப்புக்கும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.