புது தில்லி: வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், புது தில்லியில் வரும் ஜனவரி மாதத்தில் மாபெரும் சந்தைத் திருவிழா நடைபெறும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
தில்லி மாநகராட்சியே ஒட்டுமொத்தமாக திருவிழாக் கோலம் பூணும் வகையில் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை மாபெரும் சந்தைத் திருவிழா 30 நாள்கள் நடைபெறும் என்று தில்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜரிவால், மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
இதையும் படிக்க.. காய்ச்சலால் உங்க பிள்ளைங்க பள்ளிக்குப் போகலையா? இதுதான் காரணமாம்!
மேலும் அவர் பேசுகையில், ஜனவரி மாதம் தொடங்கும் இந்த சந்தைத் திருவிழா, வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு பெரும் ஊக்கமளிக்கும். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்தும், தில்லியில் நடைபெறும் மாபெரும் சந்தைத் திருவிழாவுக்கு வரத் தயாராகுங்கள். தில்லி மற்றும் அதன் கலாசாரத்தை அறிந்துகொள்ள தயாராகுங்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து, ஈடு இணையற்ற சந்தைத் திருவிழாவாக இது அமையும். பல சிறப்புத் தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். ஒட்டுமொத்த தில்லியும் விழாக்கோலம் பூணும். சிறப்புக் கண்காட்சிகளும் நடத்தப்படும்.
நாம் இப்போது இதைத் தொடங்கவுள்ளோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில், உலகிலேயே மிகப்பெரிய சந்தை திருவிழாவாக இது மாறும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் முதல்வர் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.