நபிகள் நாயகம் பற்றி கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசியதாகக் கூறி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் இணைத்து விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், நூபுர் சர்மாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.
அவரது உளறல் பேச்சு ஒட்டுமொத்த நாட்டுக்கும் தீவைத்து விட்டதாகவும் நாட்டில் தற்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துக்கும் நீதிபதிகள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நூபுர் சர்மா நேரில் ஆஜராக கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கெனவே சம்மன் அனுப்பி அவர் ஆஜராகாத நிலையில், வருகிற ஜூலை 11 ஆம் தேதி நார்கெல்டங்கா காவல் நிலையத்தில் ஆஜராக அவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.