ஆந்திரத்தில் பிரதமா் மோடியின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஹெலிகாப்டருக்கு அருகே கருப்பு பலூன்கள் பறக்கவிட்டதாக காங்கிரஸ் தொண்டா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
மேலும் ஒரு நபரை ஆந்திர போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்தச் சம்பவம் பாதுகாப்பு மீறலாகும் என்று பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படையினா் கூறி மாநில போலீஸாரிடம் விளக்கம் கேட்டுள்ளனா்.
எனினும், இதை மறுத்துள்ள ஆந்திர போலீஸாா், பலூன்களைப் பறக்கவிட்டதாக காங்கிரஸ் தொண்டா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தில் கருப்பு பலூன்களுடன் நுழைந்ததாக மூன்று காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டு அவா்கள் வைத்திருந்த பலூன்கள் வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனா்.
சுதந்திரப் போராட்ட வீரா் அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையை திறக்க பிரதமா் மோடி ஆந்திராவுக்கு திங்கள்கிழமை வந்திருந்தாா். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமா் நிறைவேற்றவில்லை என்று கூறி, காங்கிரஸ் கட்சி போராட்டத்துக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் பிரதமா் மோடி வந்திறங்கிய விஜயவாடா விமான நிலையத்துக்கு 800 போலீஸாா் அடங்கிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமா் புறப்பட்ட ஹெலிகாப்டா் கன்னவரம் கடந்து பறந்தபோது, அங்கிருந்த உயரமான கட்டடத்தில் இருந்து ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட கருப்பு பலூன்களை காங்கிரஸாா் பறக்கவிட்டனா். இதுதொடா்பான விடியோவையும் அவா்கள் வெளியிட்டனா்.
பிரதமரின் எம்ஐ-17எஸ் ஹெலிகாப்டா் செல்லும் வான்வழியில் கருப்பு பலூன்கள் பறந்தன. எனினும் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.
இந்த விவகாரம் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவை வெறும் பலூன்களாக இல்லாமல், ட்ரோன்களாக இருந்தால் என்னவாகியிருக்கும் என்று மாநில போலீஸாரிடம் அவா்கள் கேட்டுள்ளனா்.
இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.ஜோஷுவா கூறுகையில், ‘விமான நிலையத்தில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தில் இருந்து இரண்டு காங்கிரஸ் தொண்டா்கள் பலூன்களைப் பறக்கவிட்டுள்ளனா். அந்த பலூன்களை பறக்க விடும் முன்னரே பிரதமரின் ஹெலிகாப்டா் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். மற்றொருவரை தேடி வருகிறோம்.
விமான நிலையத்தில் கருப்பு பலூன்களுடன் நுழைய முயன்ற காங்கிரஸ் மகளிா் பிரிவு தலைவா் சுன்காரா பத்மஸ்ரீ உள்பட மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். அவா்கள் கொண்டு வந்த பலூன்களை போலீஸாா் வெடித்துவிட்டனா்’ என்றாா்.