மகாராஷ்டிரத்தில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனை மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் எழுந்ததால், முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்யப்பட்டதை அடுத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் முதல்வராகவும்,பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதையும் படிக்க | ‘விமானத்தைவிட கார் கட்டணம் அதிகம்’: புலம்பும் மும்பைவாசி!
துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல்முறையாக தனது சொந்த ஊராக நாக்பூருக்கு இன்று வந்த ஃபட்னவீஸுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ், மகாராஷ்டிர அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து தேவேந்திர ஃபட்னவீஸை பாஜக தொண்டர்கள் ஊர்வலமாக திறந்தவெளி வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.