மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக, மும்பை, கடலோர நகரமான கொங்கன் மற்றும் இதர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மகாராஷ்டிர மாநிலத்தில் பரவலாக நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இதில் நகரங்கள், கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளப் பகுதிகள் என வெள்ளம் சூழந்துகொண்டது. இதனால், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை பத்திரமாக மீட்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
ஆண்டுதோளும் ஒரு நாள் மழை பெய்தாலே வெள்ளம் சூழ்ந்துகொள்ளும் இடங்களான சியோன், கிங்ஸ் சர்க்கிள், குர்லா, நேரு நகர் உள்ளிட்டவை முழங்கால் அளவுக்கு தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் சாலை மறியல் செய்து வருகிறது. பல சாலைகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகின்றன.
கடுமையான வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பேருந்து போன்ற வாகனங்கள் மீட்கும் பணிகள் ஒருபக்கமும், சாலைகளில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றும் பணி மறுபக்கமும் நடந்து வருகிறது.