தனது வீட்டிற்கு வாடகை காரில் செல்வதைவிட கோவாவிற்கு விமானத்தில் செல்லும் கட்டணம் குறைவு என்று மும்பைவாசி பகிர்ந்த அனுபவம் வைரலாகி வருகின்றது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசித்து வருபவர் ஷ்ரவன்குமார் சுவர்ணா. இவர் ஜூன் 30ஆம் பணி முடிந்து வீடு திரும்பும்போது பலத்த மழை பெய்ததால், யூபர் காரில் செல்ல முடிவெடுத்துள்ளார்.
தனது கைப்பேசியில் உள்ள யூபர் செயலியில், தான் இருக்கும் இடத்திலிருந்து வீட்டிற்கான கட்டணத்தை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சுமார் 50 கி.மீ. பயணத்திற்கு சிறிய ரக காருக்கு ரூ. 3,041.54, பிரீமியர் ரக காருக்கு ரூ. 4,081.31, எக்ஸ்எல் ரக காருக்கு ரூ. 5,159.07 என கட்டணம் காட்டியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷ்ரவன்குமார், டிவிட்டரில் அந்த கட்டணப் படத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | நேற்று 13; இன்று 10: அந்தமானை அதிரவைக்கும் நிலநடுக்கம்
அதில், வீட்டிற்கு வாடகை காரில் செல்வதைவிட, கோவாவிற்கு விமானத்தில் செல்லும் கட்டணம் குறைவு என அதிருப்தியுடன் பதிவிட்டிருந்தார்.
ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 10 கட்டணம் வசூலித்தால்கூட, 50 கி.மீ.க்கு 500 ரூபாய்தான் ஆகும் என கமெண்ட் செய்யும் பலரும் தங்களது அனுபவங்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், யூபரில் ரூ. 5,159 கட்டணம் செலுத்தி செல்வதைவிட நாசிக்கில் எந்த சிரமமுமின்றி குடியிருப்பு வாங்கிவிடலாம் என்று சித்தார்த் ஜெயின் என்பவர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
ஷ்ரவன்குமாரின் பதிவு வேகமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சூழலில், யூபர் நிறுவனம் விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டுமென்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.